Pages

May 29, 2013

புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள்: பொன். செல்வராசா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த மக்கள் இல்லாததால் ஏற்கனவே இருக்கின்ற புத்தர் சிலைகளை பராமரிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் புதிதாக எதற்கு புத்தர் சிலை? இப்பிரதேசத்தில் புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது என மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபையின் நுழைவாயில் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனைக் கண்டித்தும் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேச மக்களினாலும் அவ்வூர் பிரமுகர்களாலும் “அத்துமீறி புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்புப் பேரணி” எனும் தொனிப் பொருளிலான மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மங்களாராம விகாரை விகாராதிபதி அம்பித்திய ஸ்ரீ சுமரரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலங்காலமாக வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு மத்தியில் இன முறுகலை ஏற்படுத்த முனைகின்றார்.

இலங்கை நாட்டில் சமாதானம் நிலவி வருகின்ற இக்கால கட்டத்தில் இவ்வாறு பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் புத்தர் சிலையை அமைத்து இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மட்டக்களப்பு மங்களாராம விகாரை விகாராதிபதி அம்பித்திய ஸ்ரீ சுமரரத்ன தேரரின் இந்த நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.

புத்தர் சிலை அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளஇந்த செயற்பாடானது மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் சமாதனத்தையும் சகவாழ்வையும் குழப்பும் நடவடிக்கையாகும்.
இதனை உடனடியாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் நிறுத்த வேண்டும்.


இதேவேளை குறித்த புத்தர் சிலையை இன்று புதன்கிழமை இந்த இடத்தில் வைக்கவுள்ளார் என்பதை அறிந்து இதற்கு இன்று ஆட்சேபனை தெரிவிக்கும் வண்ணமும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்து அதை நடாத்திக் கொண்டிருந்தோம்.
இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பிலுள்ள 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன ஆகியோரை சந்தித்து இது பற்றி கலந்துரையாடினோம்.

இச்சந்திப்பின் போது குறித்த பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது.என்னை நம்புங்கள்.ஏனெனில் மங்களாராம விகாராதிபதி தற்போது கண்டியில் உள்ளார்.எதற்கும் நீங்கள் பயப்படத் தேவையில்லை.தயவு செய்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்ததுடன் இதன் பிரதிகளை 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன மற்றும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம்.

இங்கு புத்தர் சிலை அமைக்கப்படமாட்டாது என பிரிகேடியர் வாக்குறுதி அளித்ததற்கிணங்கவே குறித்த ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளோம்.
பௌத்தர்கள் இல்லாத மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தர் சிலையை அமைத்து புத்த பெருமானை அவமதிக்காதீர்கள்.இங்கு ஏலவே அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை பராமரிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் மீண்டும் அதே பிரதேசத்தில் புத்தர் சிலை அமைக்கப்படுவதானது புத்தரை மேலும் மேலும் அவமதிக்கின்ற செயலாகவே நாம் கருதுகின்றோம்.

நீங்கள் உங்களுடைய விகாரைகளில் எத்தனை சிலைகளை வேண்டுமானாலும் அமையுங்கள்.நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம்.பௌத்தர்களே இல்லாத மட்டு மாநகர சபை எல்லையில் புத்தர் சிலையை அமைத்து புத்தரை இம்சை செய்யாதீர்கள்.

இருக்கின்ற சிலைகளை நாம் ஒன்றும் செய்யமாட்டோம்.அப்படியான வேலைகளை செய்பவர்கள் அல்ல த.தே.கூ.
ஆகவே ஏற்கனவே இருக்கின்ற சிலைக்கு 1அடிக்கு அப்பால் புத்தர் சிலை அமைக்கும் இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment