Pages

May 17, 2013

பேஸ்புக் பயனாளிகளை அனுமதியின்றி கைது செய்ய தடை


சமூக வலைத் தளங்களில், ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவிப்போரை,உயரதிகாரிகளின் அனுமதியின்றி, போலீசார் கைது செய்யக்கூடாது´ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலை தளமான, "டுவிட்டர்´ மற்றும், "பேஸ்புக்´கில்,ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவிப்போர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவசேனா தலைவர், பால் தாக்கரே மறைவு குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இரண்டு இளம் பெண்கள் மீது, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழக கவர்னர், ரோசய்யாவுக்கு எதிராக, சமூக வலைத் தளத்தில் கருத்து தெரிவித்த,ஆந்திராவைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, ஜெயா விந்தயாள் என்ற பெண், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

செல்லுபடியாகுமா? ; இந்நிலையில், "தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66ஏ பிரிவு செல்லுபடியாகுமா என்பது குறித்து, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு,நிலுவையில் உள்ளதால், வழக்கு முடியும் வரை, சமூக வலைத் தளங்களில்,ஆட்சேபகரமான கருத்துக்கள் தெரிவிப்போர் மீது, நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்´ எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள், பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்´ முன்,நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக, உயர் போலீஸ் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல், நடவடிக்கை எடுக்க கூடாது என, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு, அறிக்கை அனுப்பியுள்ளது. அனுமதி இன்றி இந்த அறிக்கையை, அனைத்து மாநில அரசுகளும், உறுதியாக பின்பற்ற வேண்டும். சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்போரை எதிராக, உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி, போலீசார் கைது செய்யக் கூடாது.

அதேநேரத்தில், சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு தடை விதிக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66ஏ பிரிவு செல்லுபடியாகுமா என்பது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,இது தொடர்பாக, போலீசாருக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment