'கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்'..
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆறுகள், குளங்கள் மற்றும்
கால்வாய்களின் எல்லைகளை எவரும் சுவீகரிப்பதற்கு அனுமதிக்க முடியாது. ஏழை
விவசாய வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக பயன் படுத்தப்படுகின்ற
நீர்ப்பாசனக் குளங்களை எல்லையிட்டு அடையாளப்படுத்தி பாதுகாக்கப்பட
வேண்டியது அவசியமாகும். இதற்கு முக்கியமாக நீர்ப்பாசன திணைக்களத்தின்
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீர்ப்பாசன அமைச்சர்
எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச விவசாயிகளுக்கு சிறந்த நீர்ப்பாசனத்
திட்டத்தினை எற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அதற்கான மீளாய்வக் கூட்டம்
அம்பாறை பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யூ.எல்.ஏ. நஸார் தலைமையில்
சாகாமம் நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற
மூவின மக்களின் தேவையை அறிந்து கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் மூலம்
பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றோம். இவ்வாறு மக்களின்
வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் வகிக்கின்ற நீர்ப்பாசனத் திட்டங்களை
திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்து வருகின்ற சந்தர்ப்பத்தில்
நீர்ப்பாசனத்திற்கான இடங்களை சுவீகரித்து வருகின்றமை விவசாயத்துறையில்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாகச் சொல்லப்போனால் அம்பாறை
மாவட்டத்தின் முக்கியத்துவம் பெற்றுள்ள களியோடை ஆற்றின் எல்லைகள் சில
இடங்களில் சுவீகரிக்கப்பட்டு அது சிறு வாய்க்கால் போல் காட்சியளிக்கின்றது.
ஒலுவிலில் வந்தடையும் களியோடை ஆறானது மழைகாலத்தில் ஏற்படுகின்ற வெள்ளப்
பெருக்கிலிருந்து பாதுகாப்பளிப்பது மட்டுமின்றி விவசாய நிலங்களுக்கான
பாய்ச்சல், வடிச்சல்களுக்கும் பெரிதும் பங்களிப்பச் செய்து வருகின்றது.
இவ்வாறுதான் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று விவசாயக் காணிகளுக்கான
பாய்ச்சல். வடிச்சல் வாய்க்கால்கள், கால்வாய்கள், ஆறுகள் போன்றன தனிப்பட்ட
சிலரினால் சுவிகரிக்கப்பட்டு அவைகள் குறுகியவையாக காணப்படுகின்றன. இதில்
கோணாவத்தை ஆறும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகவுள்ளது. இதனை நாம்
பாதுகாத்து எமது பின் சந்ததியினரும் பிரயோசனம் அடையும் வகையில்
எல்லைப்படுத்தி பாதுகாத்து வருகின்றோம். இவ்வாறே ஓரு திட்டத்தின் கீழ்
அனைத்து நீர்ப்பாசன இடங்களும் பாதுகாக்கப்பட்டு அழகு படுத்தப்படவேண்யுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்த காலங்களில் தூர்ந்து கிடந்த பல குளங்கள்,
வாய்க்கால்கள், விவசாய நிலங்கள் மாகாண சபை ஆட்சியில் ஐந்து வருடங்களில்
மிகவேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய
நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டு வருகின்றன. இதனால் மூவின
சமூகங்களும் தமது ஜீவனோபாயங்களை மேற் கொண்டு வருவது மட்டுமல்லாது இன
நல்லுறவும், பரஸ்பரமும் ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment