கிராண்ட்பாஸ் பள்ளிவாசலும் வீடுகளும் தாக்குதலுக்குள்ளான போது பொலிஸார் அதனைத் தடுக்காது இருந்துள்ளனர். அதற்கான அத்தாட்சிகளை பொலிஸ் மா அதிபருக்கு இன்று அனுப்பி வைக்கவுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன், சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக எடுக்கப்படவுள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கவுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடிதத்துடன் சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் செயற்படாது வெறுமனே இருந்தமைக்கு அத்தாட்சியாக டிவிடி மற்றும் சிசிடிவி பதிவுகளையும் அனுப்பி வைத்துள்ளார்.
அமைச்சர் குறிப்பிட்ட கடிதத்தில் மேலம் தெரிவித்துள்ளதாவது;-
கடந்த 11ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்த்தன மற்றும் ஏ.எச். எம். பெளஸி தலைமை தாங்கிய கூட்டத்தில் குறிப்பிட்ட தாக்குதல் இடம் பெற்ற போது பொலிஸார் தாக்குதல்களைத் தடுக்காது செயலற்றிருந்தமை தொடர்பாக நான் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக இந்த அத்தாட்சிகளை அனுப்பி வைக்கிறேன்.
குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த சில குடியிருப்பாளர்கள் இந்த பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நேரடி சாட்சிகளாக இருக்கிறார்கள் . பொலிஸார் தாக்குதல்களைத் தவிர்க்காமை அவர்கள் தாக்குதல்களுக்கு உதவியதாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள்.
பாராளுமன்றத்தின் பிரதிநிதி என்ற வகையில் இந்த பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் பாரதூரமான விடயமாக நான் இதனைக் கருதுகின்றேன்.
இலங்கை பொலிஸார் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களில் பாராபட்சமற்ற முறையில் தங்களது கடமைகளைச் செய்யவில்லை என்பது இது முதலாவது முறைப்பாடல்ல. பொலிஸார் தமது கடமைகளைச் சரியாகச் செய்யாமை தாக்குதல்களுக்கு உரமூட்டுவதாக அமையும். அத்தோடு நாட்டில் முறுகல் நிலையை உருவாக்க எண்ணியுள்ளோரை ஊக்குவிப்பதாகவும் அமையும் இது நாட்டின் வரலாற்றுக்கு நிரந்தர களங்கத்தை ஏற்படுத்திவிடும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் இவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இது தொடர்பில் உடனடியாக நீங்கள் விசாரணைகளை ஆரம்பிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மற்றும் வீடுகள் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அச்சம்பவத்தை தடுத்து நிறுத்தாத அவ்விடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பியுங்கள். மேலதிக விபரங்கள் தேவைப்படின் என்னை அல்லது எனது செயலாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தை தடுக்காது பொலிஸார் செயலற்று இருந்தமையை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் பொலிஸ் மா அதிபரை பதவி விலகும் படியும் கோரியிருந்தார்.
Tags : கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல், ரிஷாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபர் (VV)
No comments:
Post a Comment