Pages

Apr 9, 2013

ஜுலை 10 க்கு முன்னர் வடக்கில் தேர்தலை நடத்த வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்தல்!

வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதிக்கு முனனர் நடத்துவதே நாட்டுக்கு சிறந்ததென பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு எச்சரிக்கை விட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. ஆனால் அதனை எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும். ஏனெனில் சர்வதேச நாடுகள் அதனையே உற்றுநோக்கிய வண்ணமுள்ளன.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையிலும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் தீர்மானத்திலும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அங்கு சிவில் நிர்வாக அதிகாரி ஒருவரிடம் ஆளுநனர் பதவியை ஒப்படைக்க வேண்டும். இதைவிட பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீன தேர்தல் ஆணைக் குழு போன்றவை அமைக்கப்பட வேண்டும்.
தேர்தல் காலங்களில் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அப்போதே தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெறக் கூடிய சாத்தியமுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.vk

 

No comments:

Post a Comment